Published : 06,Dec 2022 04:07 PM
ஒரு நாயை கொல்ல 200-300 ரூபாய் கூலி! நாய்களை கொன்றுகுவித்த ஊராட்சிதலைவர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் 30-க்கும் மேற்பட்ட நாய்களை கொன்று புதைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், விலங்கு நல ஆர்வலர் கொடுத்த புகாரின் பேரில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
கொன்று குவித்து புதைத்த நாய்களை தோண்டி எடுத்து, அரசு கால்நடை மருத்துவத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் நாய்களை தலையில் அடித்தும், சுருக்கு கம்பி போட்டு பிடித்தும், நாய்களை கொன்று வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலையில் இருந்துள்ளனர். பொதுவாக நாய்கள் அதிகரித்து வருவதால் அதை கருத்தடை செய்து மீண்டும் அதே பகுதியில் விட வேண்டும் என்பது விதி. ஆனால் விருதுநகரில் இதர்கு நேர்மாறாக, நாய்கள் தொந்தரவால் அவற்றை அடித்துக் கொள்ளும் செயல் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதின் பேரில், அப்பகுதியின் அருகே உள்ள ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சுனிதா என்பவரிடம் மக்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்து ப்ளு கிராஸ் அமைப்பை சேர்ந்த சுனிதா சங்கரலிங்கபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் கொல்லப்படுவதாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அப்புகார் மனுவின் அடிப்படையில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டபொழுது, சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் 30க்கும் மேற்பட்ட நாய்களை அப்பகுதி ஊராட்சிமன்ற தலைவர் நாகலட்சுமி, மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க சில கைக்கூலி நபர்கள் கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இப்படி அப்பகுதியில் சுற்றித்திரிந்த 30க்கும் மேற்பட்ட நாய்களை தலையில் அடித்தும், சுருக்கு கம்பி வளை வைத்து பிடித்தும் அவர்கள் கொடூரமாக கொன்று குவித்து புதைத்துள்ளனர்.
ஒரு நாயினை கொன்று புதைப்பதற்கு 200 முதல் 300 ரூபாய் வரையும் கூலி தருவதாகவும். ஊராட்சி மன்றத் தலைவர் கூறியதையடுத்து இரண்டு, மூன்று தினங்களாக கொன்று குவிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொன்று குவித்த நாய்கள் குறித்து அப்பகுதியில் காவல்துறையினர் சோதனை இட்டு விசாரணை செய்ததில், சங்கரலிங்கபுரம் ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் முப்பதுக்கும், மேற்பட்ட நாய்களை கொன்று குவித்து புதைத்து வைத்தது தெரியவந்தது. இந்நிலையில் நாய்களை புதைத்த இடத்தை அறிந்து காவல்துறை உதவியுடன், அரசு கால்நடைதுறை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட நாய்களை தோண்டி எடுத்து அதனை பிரத பரிசோதனை செய்து மீண்டும் புதைத்தனர்.
இது குறித்து ஆமத்தூர் காவல் துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தெரிவித்த காவல்துறை, பொதுவாக நாய்கள் தொல்லை அதிகரித்தாலோ அல்லது வெறி நாய்கடி இருந்தாலோ அருகில் உள்ள கால்நடைதுறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்விஷயத்தில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி தலைவர் அதுபற்றி ஏதும் கால்நடைதுறையினருக்கு தகவல் அளிக்காமல் நாய்களை கொன்று குவித்ததாக சங்கரலிங்கபுரம் கால்நடைதுறை தெரிவித்திருக்கின்றனர்.