Published : 16,Apr 2018 02:07 PM
பூட்டை உடைத்து பேராசிரியை கைது: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு!

பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நிலையில், உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காவல்நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் புகார் அளித்திருந்தது. அத்துடன் அவரை கைது செய்யக்கோரி மாணவர்களும், பெற்றோர்களும், மகளிர் அமைப்பினரும் கல்லூரி முன் கூடி முழக்கமிட்டனர்.
இதையடுத்து நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். நிர்மலா தேவியின் வீட்டிற்கு வட்டாட்சியர், கார்த்தியாயினி சென்று சோதனையிட்டார். சர்ச்சைகளால் நிர்மலா தேவி வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பதாக தகவல் வெளியாகியது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என விருதுநகர் ஏடிஎஸ்பி மதி புதிய தலைமுறைக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த நிர்மலா தேவியை காவல்துறையினர் அதிரடியாக பூட்டை உடைத்து உள்ளே சென்று கைது செய்தனர். நிர்மலா தேவியின் கணவர் சரவணபாண்டியன், சகோதரர் மாரியப்பன் முன்னிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணையை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நடத்துவார் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார். குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.