திருவண்ணாமலை: சாலையை கடக்க முயன்ற கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: கோவிந்தராஜூலு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் சுமை தூக்கும் தொழிலாளி முனியப்பன் (36). இவர் தனது மனைவி வாசலா (36) உடன் வீட்டுக்கு அருகே உள்ள பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற கார் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தும், காவல்துறையினர் வராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் செங்கம் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

