Published : 04,Oct 2017 04:03 AM
சுடுவோம் என அச்சுறுத்திய இலங்கை கடற்படை: மீட்புக்குழு மீனவர்கள் புகார்

இலங்கையில் படகுகளை மீட்க சென்றபோது இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தியதாக மீட்புக்குழு மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்க கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து காரைநகர் மற்றும் மன்னார் கடற்படை முகாமிற்குச் சென்ற மீனவர்களை சோதனை என்ற பெயரில் ஒருநாள் முழுவதும் துறைமுகத்தில் அனுமதிக்கவில்லை என மீட்புக்குழுவினர் புகார் தெரிவித்தனர்.
நீந்திக் கரை செல்லலாம் என்றாலும் துப்பாக்கியால் சுடுவோம் என இலங்கை கடற்படை மிரட்டியதால், படகிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். எனவே, இரவு முழுவதும் வேலை செய்ததாகவும் ஒரு படகை மட்டுமே இழுத்து வர முடிந்ததாகவும் அடுத்தடுத்த படகுகளிலுள்ள பழுதை நீக்க இலங்கை கடற்படையினர் போதிய நேரம் வழங்கவில்லை எனவும் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.