Published : 20,Feb 2023 12:50 PM
சென்னை: சட்டவிரோதமாக மழைநீர் வடிகாலுடன் 1,470 கழிவுநீர் இணைப்புகள்! 5 லட்சம் வரை அபாரதம்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில், 1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,09,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், மழைநீர் வடிகால் துறையின் மூலம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்படுவது மட்டுமல்லாமல், தொடர்ந்து பராமரிக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில், ஆங்காங்கே சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 04.02.2023 முதல் 17.02.2023 வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில், மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,09,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.