Published : 08,Jul 2021 07:38 AM
விருதுநகர்: பெண்களின் புகைப்படங்களை ட்விட்டரில் ஆபாச வசனங்களுடன் பதிவிட்டவர் கைது

பெண்களின் புகைப்படங்களை ஆபாச வசனங்களுடன் ட்விட்டரில் பரப்பிய நபரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியைச் சேர்ந்த கல்லூரிப் பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் புகைப்படங்கள் ஆபாச வசனங்களுடன் பகிரப்பட்டுள்ளதாக பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜசேகருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில் விஜி என்கிற வீர புத்திரன் என்பவர் தான் பெண்களின் புகைப்படங்களை ஆபாச வார்த்தைகளுடன் பதிவிட்டு வந்தார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.