Published : 01,Nov 2020 05:26 PM
“வழுக்கையை மறைத்து ஏமாற்றிவிட்டார்” - கணவரை கைது செய்ய சொல்லும் மனைவி

வழுக்கையை மறைத்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொண்டதாக பெண் ஒருவர் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
மும்பையில் 27 வயது பெண் ஒருவர் நாய நகர் போலீசாரிடம் புகார்மனு ஒன்றை அளித்தார். அதில், “எனக்கும் எனது கணவருக்கும்(29) கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. அவர் வழுக்கை இருப்பதை விக் வைத்து மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருக்கு வழுக்கை இருப்பது திருமணத்திற்கு பிறகே எனக்கும் எனது குடும்பத்திற்கும் தெரியவந்தது. மேலும் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்துக்கொள்ளவும் அவர் வற்புறுத்துகிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே அந்த பெண்ணின் கணவர், தானேவில் உள்ள நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், இதுகுறித்து தனது மாமியாரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன் எனவும் அதற்கு இதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை என மாமியார் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் கணவர் மீது இந்திய தண்டனை சட்டம் 498,406, 377 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தானே நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவரை போலீசில் சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளது. மூத்த காவல் ஆய்வாளர் கைலாஷ் பார்வே, அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.