Published : 21,Aug 2020 11:04 AM
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள்: சொதப்பிய பிளான்.. சிக்கிய இருவர்

உயர்நீதிமன்ற மதுரை கிளை எதிரேயுள்ள ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்ற காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மதுரை மேலூர் மெயின்ரோட்டில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செயல்பட்டு வருகிறது. இதன் எதிர்ப்புறத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கனரா வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நள்ளிரவு 2 மணியளவில் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பது போல வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இரவு பணியை முடித்துவிட்டு பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஏடிஎம் மையத்தின் வாசலில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த 2 இளைஞர்களை பார்த்த காவலர்கள் அவர்களிடம் விசாரிக்க வாகனத்தை நிறுத்தினர்.
இதைப்பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மேலும் இருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருப்பதை கண்ட காவலர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் காவலர்கள் சாதுரியமாக செயல்பட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் தப்பியது.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.