Published : 13,Jul 2020 03:18 PM
மணமக்களை தேடிவரும் நடமாடும் திருமண மண்டபங்கள் : கொரோனா காலத்தில் புதிய முயற்சி..!

கொரோனோ ஊரடங்கு காலத்தில் தனிமனித இடைவெளி கடைபிடித்து திருமணம் நடத்தும் வகையில் மணமக்களை தேடி வரும் நடமாடும் திருமண மண்டபங்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்கார மேடைகள் அமைத்து தரும் தொழில் செய்து வருபவர் ஹக்கிம். கொரோனோ ஊரடங்கு காலத்தில் திருமணமண்டபங்கள் கோவில்கள் மூடபட்டுள்ள நிலையில் இல்லங்களில் திருமணங்கள் மிகவும் எளிதாக நடைபெற்று வருகிறன. இதனால் சில பெற்றோர்களும், மணமக்களும் வேதனையை வெளியே சொல்லாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து தன்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் மனவருந்தி கூறியதை கேட்ட அலங்கார அமைப்பாளர் ஹக்கிம், தனது கனரக வாகனத்தில் மணவறை போன்று வடிவமைத்துள்ளார். மேலும், மணமக்கள் இல்லத்தருகே மண்டபம் போல் செட் அமைத்து திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்பு அறையிலேயே உடல்வெப்பம் பரிசோதித்து உள்ளே அனுப்புகின்றனர். சானிடைசர், மாஸ்க் போன்றவை வழங்கி தனிமனித இடைவெளியோடு பெரிய மண்டபத்தில் நடத்தபடும் சுபகாரியம்போல் அமைந்துள்ளது.
இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தங்களுக்கு ஒரு பெரிய மண்டபத்தில் நடந்த மனநிறைவு கிடைப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கொரோனோ ஊரடங்குகாலத்தில் சுபகாரியங்களை விமர்சையாய் நடத்தமுடியாமல் போவதாக பொதுமக்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் உடுமலை அலங்கார கலைஞர் ஹக்கிமின் புதுமுயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.