Published : 16,May 2019 08:47 AM

ஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் !

3-Persons-die-for-AC-Burst-in-Tindivanam---The-police-suspect-that-there-may-be-murder

திண்டிவனம் அருகே ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை,தாய், மகன் என 3 பேர் உயிரிழந்த நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காவேரிப்பாக்கத்தில் வசித்த ராஜ் என்பவர், தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதமனுடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் இரவு உறங்கியுள்ளார். அப்போது, ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார். 

பின் ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என கூறப்பட்டது. ஆனால் முதியவர் ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன் போலீசாரின் சந்தேகத்தை தீவிரப்படுத்தியது. 

இந்நிலையில் எரிந்த நிலையில் அறையை விட்டு வெளியே ஓடி வந்த முதியவர் ராஜை, தப்பிக்க விடக் கூடாது என்று எண்ணி யாராவது தாக்கி இருக்கலாம் என்றும் அதனாலே அடிபட்டு ரத்தம் வழிந்திருக்கும் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன் இருந்ததால் யாரேனும், மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு ஏசி மின்கசிவு எனக் கூறி சமாளிக்க திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த ராஜூக்கு, அதிகம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே சொத்துப் பிரச்சனையில் ராஜூ, அவரது மனைவி மற்றும் இளைய மகன் என மூவரும் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ எரிந்து கொண்டிருந்த போது அதே வீட்டின் மற்றொரு அறையில் ராஜின் மூத்த மகனான கோவர்த்தனன் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக கோவர்த்தனனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோவர்த்தன், அவரது மனைவி ஆகியோர் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்