Published : 04,Sep 2022 09:37 PM
’அடுத்தகட்ட போராட்டம் நடந்தால் ரத்தக்களரியில் முடியும் ஆபத்து’ -இலங்கை மத்தியவங்கி ஆளுநர்

இலங்கையில் அடுத்தகட்ட போராட்டம் நடந்தால் ரத்தக்களரியில் முடியும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
இலங்கையின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்றபோது டாலர் கையிருப்பு குறைந்த அளவிலேயே இருந்ததாக தெரிவித்தார். அதற்கு முந்தைய அரசின் மோசமான செயல்பாடுகளே காரணம் என விமர்சித்த அவர், எதிர்காலத்தில் மேலும் பணவீக்கம் உயரும் நிலை உருவாகும் எனத் தெரிவித்தார்.
இதன் காரணமாக குறைந்த வருமானம் பெறும் மக்களே பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் எனக் கூறிய அவர், இதனால் மீண்டும் ஒரு போராட்டம் நடந்தால், அது ரத்தக்களரியில் முடிவடையவே அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தார். எனவே சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கேட்டுக் கொண்டார்.