Published : 11,Sep 2017 08:12 AM
தடை மீறி போராட்டம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகரன் என்பவர், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அரசு ஊழியர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படும் நிலையில், வேலைநிறுத்தம் என்ற ஆயுதத்தை வைத்து மிரட்டுவது தவறு என்றும் குறிப்பிட்டிருந்தார். விசாரணையில், ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்தநிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க இன்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய அனுமதியளித்தனர்.