Published : 09,Sep 2017 02:58 AM
பாறைகள் உருண்டதால் துண்டிக்கப்பட்ட சாலை - 7 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடக்கம்

பாறைகள் உருண்டதால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் ஏழு நாட்களுக்கு பிறகு போக்குவரத்து துவங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக வடகவுஞ்சி பிரிவு அருகே சுமார் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிந்தும், ராட்சத பாறைகள் உருண்டும் சாலை துண்டிக்கப்பட்டது. மண் சரிவுகள் சரிசெய்யப்பட்ட நிலையில், பாறையை அகற்றும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் - பழனி சாலையில் பாறைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சாலையில் தற்போது இலகு ரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினரிடமிருந்து முறையான அறிவிப்பு வந்த பிறகே கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.