Published : 26,Aug 2017 05:33 AM
வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இது தென்மேற்கு பருவமழை காலமாகும். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் தண்ணீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வளி மண்டல மேலடுக்கில், காற்று சுழற்சி நீடிப்பதால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.