Published : 31,Jan 2017 06:41 AM

போலீஸ் மீது கடும் நடவடிக்கை: முதலமைச்சர் உறுதி

Severe-action-on-Police-if-they-are-involve-in-Violence--TN-CM-Pannerselvam

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையின் போது, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக காவலர்கள் மீது புகார் கூறப்படுவது குறித்து விசாரணை செய்து சம்பவம் உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டிற்காக அறவழியில் தொடங்கிய போராட்டமானது வன்முறையில் முடிந்தது. போராட்டத்தின் கடைசி நாளான கடந்த 23-ஆம் தேதி, சென்னை மெரினாவில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த வன்முறை சம்பவத்தின் போது, போலீசாரே வாகனங்களுக்கு தீ வைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் கூட, சமூக வலைத்தளங்களில் வெளியானது. போலீசார் தான் வன்முறை சம்பவங்களுக்கு காரணம் எனவும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, ஜல்லிக்கட்டு வன்முறை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர், போராட்ட வன்முறையின் போது, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக காவலர்கள் மீது புகார் கூறப்படுவது குறித்து விசாரணை செய்து சம்பவம் உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், போராட்ட வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்யும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்