Published : 24,Jan 2021 05:41 PM
ஈரோடு: நெசவாளர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி!

ஈரோடு அருகே உள்ள ஓடாநிலை பகுதியில் நெசவாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூன்று நாள்கள் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ளார். இதற்காக, சனிக்கிழமை காலை கோவை விமான நிலையம் வந்த அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதன்பின் கோவை, திருப்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இதையடுத்து ராகுல்காந்தி இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘’தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு. டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழக கலாசாரத்தை மதிக்கவில்லை. இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து ராகுல்காந்தி, ஈரோடு அருகே உள்ள ஓடாநிலை பகுதியில் நெசவாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இதனைத் தொடர்ந்து காங்கேயத்தில் வரவேற்பை ஏற்றுவிட்டு, தாராபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசி வருகிறார்.