Published : 27,Apr 2020 03:10 PM
தாயின் இறுதிச் சடங்கு - வீடியோ காலில் உடலைப் பார்த்துக் கதறி அழுத ராணுவ வீரர்..!

தனது தாயின் இறப்பிற்கு வரமுடியாத ராணுவ வீரர் ஒருவர் வாட்ஸ்அப் கால் மூலமாகத் தாயின் உடலைக் கண்டு கதறி அழுத காட்சி உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அழகாகவுண்டனூரைச் சேர்ந்தவர் தங்கவேலு. அவரது மனைவி மாது. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே இந்தத் தம்பதியரின் மகன் சக்திவேல் தற்பொழுது ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலம் சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்த தங்கவேலுவின் மனைவி மாது இன்று காலை உயிரிழந்தார்.

தனது தாய் இறந்த செய்தி கேட்டுத் துடிதுடித்துப் போன சக்திவேல் சொந்த கிராமத்திற்குத் திரும்ப முயன்றார். ஆனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அவரால் தன் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆகவே சக்திவேல் தனது உறவினர்களின் உதவியுடன் வாட்ஸ்அப் காலில் தனது தாயின் சடலத்தைக் கண்டு கதறி அழுத காட்சி அங்குக் கூடியிருந்த உறவினர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.