Published : 21,Jun 2019 10:27 AM
மகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிராவில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் அம்மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில், 6,888 பேர் மாநில அரசின் நிவாரண உதவியைப் பெற தகுதியுடையவர்கள் என மாவட்ட அளவிலான கமிட்டிகள் கூறுகின்றன.
இதுவரை தற்கொலை செய்து கொண்ட 6,845 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவியாக தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை 610 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், 192 பேர் அரசின் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள். 192 பேரில் 182 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.