
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார். மாலை 3.30 மணியளவில் இந்தக் கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் பாஜக தவிர்த்து அகாலி தளம் கட்சி சுக்பீர் சிங் பாதல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஐக்கிய ஜனதா தள் தலைவர் நிதிஷ் குமார், பிஜு ஜனதா தள் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தெலங்கானா ராஷ்டிர சமிதி மாநில தலைவர் கே.டி.ராமாராவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் தங்களுக்கு பதில் வேறு தலைவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் கலந்துக் கொள்ள அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி சென்றபோதும் அவர் ஏனோ பங்கேற்கவில்லை.