Published : 15,Feb 2019 02:11 AM

உறுதியான பாஜக-அதிமுக கூட்டணி ? : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை

BJP-ADMK-Alliance-Confirmed-----3-Hours-Discussion-filed-it

பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ள சூழ்நிலையில், கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தமிழக‌ தேர்தல் பொறுப்‌பாள‌ர் பியூஷ் கோயல் நேற்றிரவு சென்னை வந்தார். விமா‌ன நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை ‌சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கோயல், தமிழகத்தில் அமைய இருக்கும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக தெரிவித்தார். பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் பாஜக அமைக்க இருக்கும் கூட்டணி வலுவானதாக இருக்கும் என்றார். பிரதமர் மோடிக்கும் - மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நட்பு இருந்தது என்றும், அதனை முன்னெடு‌த்து செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதைத்‌தொடர்ந்து சென்னை ‌ஆழ்வார்பேட்டையில் உள்ள, தொழி‌லதிபர் பொள்ளாச்சி ‌மகாலிங்கத்தின்‌‌ இல்லத்தில் பியூஷ் கோயல், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை சந்தித்துப்பேசினார். சந்திப்பின் போது பியூஸ் கோயலுடன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் ‌தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை ‌நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட 5 பேர்‌ கொண்ட குழுவில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை முடிந்து இரவோடு இரவாக தனி விமானம் மூலமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளது என்றும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை நல்ல திசையை நோக்கி சென்று‌கொண்டிருப்பதாகவும், அதி விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்த‌ரராஜன் தெரிவித்தார்.

பாஜக - அதிமுக இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன்மூலம் பாஜக-அதிமுக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மக்களவை தேர்தலுக்கான அரசியல் கள‌த்தில் இது விறுவிறுப்பை கூட்டியுள்ளது என்றே கூறலாம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்