Published : 15,Sep 2018 09:29 AM
‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் !

தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து- குழந்தைகளுக்கான ஓர் தன்னிகரற்ற உணவு. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது தாயின் முழுமுதல் கடமை. ரத்ததானம் போலவே தாய்ப்பாலையும் தானமாக அளிப்பவர்கள் குறித்தும், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்று தகவல்கள் சேகரித்தோம்.
இந்தியாவில் 42% குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த ஒரு மணிநேரத்தில் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. 55% குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதம் வரை தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகின்றனர் என்கிற அதிர்ச்சி தகவலும் உண்டு.
‘ஹ்யூமன் மில்க் பேங்க்’ (Human Milk Bank)
பிறந்த குழந்தைக்கு அடிப்படையான உணவு தாய்ப்பால். சில தாய்மார்களுக்குப் இயற்கையாகவே பால் அதிகமாகச் சுரக்காமல் போகும் நிலையிலும், பிரசவத்தின்போது தாய் இறப்பதால் தவிக்கும் குழந்தைக்கு பால் கிடைக்காத நிலையையும் சமாளிக்க 2014-ம் ஆண்டில் ‘ஹ்யூமன் மில்க் பேங்க்’ (Human Milk Bank) திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.
‘ஆர்வம் கூட தாய்ப்பால் சுரப்பை பெரிதும் தூண்டும்’
பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன் கூறுகையில், உலகிலேயே மிக சிறந்த மருந்தும், மிக அதிக ஊட்டசத்தும், கலப்படமின்றியும் கிடைக்கும் ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. ஹ்யூமன் மில்க் பேங்க் தொடங்க காரணம், 20-25% குழந்தைகள் இரண்டரை கிலோவுக்கும் குறைவாக பிறக்கின்றனர். மேலும், மற்ற 20-25% குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் தாயின் மார்புகளின் பால் சப்புவதற்கான சத்து இன்மையால் தாய்க்கு பால்கட்டும் நிலைமையும் ஏற்படுகிறது. மேலும், சில நேரங்களில் சில தாய்மார்களுக்குப் பால்அதிகமாகச் சுரக்காமல் போகும் நிலையும் ஏற்படும். எனவே, இந்த இருநிலைகளை சமாளிக்க மருத்துவமனைகளில் பால் வங்கி தொடங்குவதே இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உணர்ந்தோம். தற்போது தமிழகத்தில் 30 முதல் 40 பால் வங்கிகள் இயங்குகின்றன; மேலும் 10 பால் வங்கிகளை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. அதனால் தமிழத்தில் சுமார் 25 மாவட்டங்கள் பால் வங்கிகள் பெறும்.
ஒருநாளைக்கு சராசரியாக 20-25 தாய்மார்கள் பால் வங்கிகளில் பால் தானம் தர முன்வருகின்றனர். அதனால் ஒரு நாளைக்கு மட்டும் ஒன்றரை லிட்டரில் இருந்து இரண்டரை லிட்டர் வரை பால் சேகரிக்கப்படுகிறது. மேலும், தானம் கொடுப்பவர்களிடம் இருந்து பால் சேகரிக்கும் முன்பு அவர்களை நன்கு பரிசோதனைக்கு உட்படுத்தியே பால் வங்கிகளுக்கு அனுப்புகிறோம். பின்னர் பால் சேகரித்த பிறகு அந்த பாலை பரிசோதித்த பின் பதப்படுத்தப்பட்ட பிறகே குழந்தைக்கு தரப்படுவதால் ஒருசில சத்துக்கள் குறைந்தாலும் அவைகளுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் இந்தியா இன்றும் பின்தங்கியுள்ளது. ஏனென்றால் நம் வாழ்க்கை நாகரிகமடைந்ததே காரணம். என்னை பொறுத்தவரை, ஒரு தாய்க்கு, குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டும் என்கிற ஆர்வமும், மகிழ்ந்திருத்தலும், நல்ல உணவு பழக்கமுமே பாலை நன்கு சுரக்கவைக்கிறது! தாய்ப்பால் ஊட்டுதலில் முன்னோடிகளாக ‘நாடோடிகள்’ (ஜிப்ஸிகள்) திகழ்கின்றனர். ஏனென்றால் அவர்கள் சத்தான உணவை உட்கொள்ளாமல் இருந்தும் பாலூட்ட வேண்டும் என்கிற மிகுதியான ஆர்வமே பாலை நன்றாக சுரக்கவைக்கும், ஆகவே குழந்தைகளுக்கு நிறைவாக பாலூட்ட அமைகிறது.
‘தானமாக பெறப்படும் பால் முழு பரிசோதனைக்கு பிறகே குழந்தைகளை சென்றடையும்’
பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் டாக்டர் கமலரத்தினம் கூறுகையில், தற்போது தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி உள்ளது. சென்னையில் மட்டும் 5 இடங்களில் தாய்ப்பால் வங்கி உள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படும் பச்சிளம் குழந்தைகள்தான் இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் அவசியமாகிறது.
அதனால், இங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் வாங்கி, தாய்ப்பால் கிடைக்காத பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். ஒரு நாளைக்கு 20 பேர்வரை தாய்ப்பால் கொடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு, இரண்டு, மூன்றுமுறை கூட தாய்ப்பால் தானம் செய்கிறார்கள். அதன் மூலமாக, 2 லிட்டர் வரையில் தாய்ப்பால் கிடைக்கும். தாயிடமிருந்து பெறப்படும் தாய்ப்பால், மைனஸ் 20 டிகிரி(-20) குளிரி்ல் பதப்படுத்தப்படுகிறது. ஆறுமாதம் வரை அதனை பதப்படுத்த முடியும். ஒருவரிடமிருந்து பெறப்படும் பால் முழுமையான பரிசோதனைகளுக்குப் பிறகே குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால், நோய்த் தொற்று குறித்த அச்சம் இல்லை.
‘தாய்ப்பால் வங்கி ஒரு வரப்பிரசாதம்!’
நலக்கல்வியாளர் கங்காதரன் கூறுகையில், தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். தாய்ப்பால் கொடுப்பதனால் ஏற்படும் இமாலய நன்மைகள் என்னவென பார்த்தால் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குழந்தைக்கு போய்ச்சேரும், தாய்-சேய் பிணைப்பு ஊக்குவிக்கப்படுகிறது. 6 மாதங்களாவது முழுக்கமுழுக்க தாய்ப்பால் கொடுக்கவேண்டியது தாயின் கடமை. குழந்தையின் எடையை அதிகரிக்கவும், குழந்தைகளின் வாழ்வாதாரத்தை கட்டமைக்கும் பங்கும் தாய்ப்பாலுக்கு உண்டு.
தாய்ப்பால் வங்கிகள் என்பது அரசாங்கம் தந்த மிகப்பெரிய வரப்பிரசாதம்! மேலும் பொது இடங்களில் தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்ட ஆங்காங்கே பாலூட்டும் மையங்கள் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. பொதுவாக தாய்மார்கள் பாலூட்ட சிரமப்படுவதற்கு காரணம், ஆடையை மிக இறுக்கமாக அணிவதே. எனவே, ஆடையை இறுக்கமாக அணிவதை தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிந்தால் சிரமமின்றி குழந்தைக்கு பாலூட்ட முடியும். எப்படி ரத்தத்தை செயற்கையாக தயாரிக்க முடியாதோ, அதேபோலதான் தாய்ப்பாலையும் முழுமையாக செயற்கை முறையில் தயாரிக்க முடியாது. அதாவது, முழுமை எனப்படுவது தாய்ப்பாலில் இருக்கக்கூடிய பந்தம், அதில் இருக்கக்கூடிய இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வேறு எந்த பாலிலும் கிடையாது.
தொடரும்...