Published : 22,Mar 2017 08:14 AM
அப்பாவின் அறிவுரையை கேட்பாரா யோகி?

முஸ்லிம்கள் உட்பட அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என உத்தர பிரதேச முதலமைச்சரின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் யோகி ஆதித்யநாத்க்கு அறிவுரை கூறியுள்ளார்.
பாஜக உத்தரபிரதேச தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என அவரது அப்பா சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். “புர்கா அணிந்த பெண்களும் உனக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். நீ முத்தலாக் முறையை எதிர்ப்பாய் என அவர்கள் நம்புகிறார்கள். எனவே அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும், “தீவிர இந்துத்துவாவாதியாக அறியப்படும் யோகி ஆதித்யநாத் அந்த பட்டத்தை துறக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியும் யோகியும் உத்தர பிரதேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார்கள் என மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது யோகியாக அறியப்படும் உ.பி முதல்வரின் இயற்பெயர் அஜய் சிங் பிஷ்ட். இப்போது 84 வயதாகும் இவரது தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட், வன ரேஞ்சராக இருந்து ஓய்வு பெற்றவர்.
அவர் ஒருபுறம் யோகிக்கு அறிவுரை சொன்னாலும் யோகி இந்துத்துவ கொள்கைகளைக் கைவிடுவதாக இல்லை. வந்தவுடன் ராமாயண அருங்காட்சியகத்திற்கு நிலம் ஒதுக்கி உத்தரவு போட்டுவிட்டார். யோகியின் பெயரில் உள்ள வலைதளத்தில் (www.yogiadityanath.com) பசுவதைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வேண்டுமா என்று கருத்து கணிப்பு நடத்தினார். இதில் 98 சதவீதம் பேர் கடுமையான சட்டங்கள் வேண்டும் என வாக்களித்துள்ளனர். மேலும் நேபாளம் ஹிந்து நாடாக இருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அவசியம் என்பதை வலியுறுத்தும் கட்டுரையும் அந்த வலைதளத்தில் இடம் பெற்றுள்ளது. மாடு வெட்டும் கூடாரங்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் துரிதபடுத்தியுள்ளார் யோகி.