Published : 28,Jun 2018 08:49 AM
பாலில் பிரச்சனை இல்லை ! குழந்தை இறந்ததற்கு காவல்துறை விளக்கம்

சென்னை புரசைவாக்கத்தில் பால் குடித்த குழந்தை உயிரிழந்ததற்கு மூச்சு திணறலே காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த கிஷோர் - சித்ரா தம்பதியின் 2வயது மகள் கனிஷ்கா. கடந்த 25ஆம் தேதி சித்ரா தனது குழந்தைக்கு பாக்கெட் பால் கொடுத்து குழந்தையை தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர், புகாரில், குழந்தை பாக்கெட் பாலை தவிர வேறு எதையும் அருந்தாதால் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து குழந்தையின் உடல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், பால் கொடுத்தவுடன் குழந்தையை தூங்க வைத்ததால், செரிமாணம் ஆகாத பால் மூச்சுக்குழாய்க்குள் சென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது, தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர். குழந்தை குடித்த பாலில் எந்த பிரச்னையும் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர்.