
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நீதிமன்ற உத்தரவின்படி திருமண மண்டபத்தை அகற்ற கோரி சமூக ஆர்வலர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள குருசாமிபாளையம் பில்லாநல்லூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு சமூகத்தினர் திருமண மண்டபம் கட்டியிருந்தனர். இதனை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஏணிபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தீர்ப்பின்படி திருமண மண்டபத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, மண்டபத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏணிபெருமாள் பலமுறை வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை.
இதனால் ஏணிபெருமாள் ராசிபுரம் புதியபேருந்து நிலையத்திலிருந்து வட்டாச்சியர் அலுவலகத்திற்கு தலையில் கருப்பு முகமூடி அணிந்து கழுத்தில் தூக்கு கயிறுமாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் ஏணிபெருமாள் துணை வட்டாச்சியரிடம் நடவடிக்கை எடுக்க மனு அளித்தார்.