Published : 04,Jan 2022 01:52 PM
மாணவி உயிரிழப்பு: கவனக்குறைவாக இருந்ததாக பேருந்து ஓட்டுநர், நடத்துனர் கைது

ஓசூர் அருகே பேருந்தில் இருந்து கீழே விழுந்து மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் நவ்யா ஸ்ரீ (17). இவர், கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்ப தர்மபுரி செல்லும் அரசு பேருந்தில் சென்றார். அப்போது அவர் இறங்கும் இடத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் பதற்றமடைந்த மாணவி, பேருந்து மெதுவாகச் சென்றபோது இறங்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதைத் தொடர்ந்து இறந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உதவி புரிய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கவனக் குறைவு, அலட்சியமாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் வெங்கடேஷ் மற்றும் நடத்துனர் குமார். ஆகியோரை உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்