Published : 02,May 2020 03:01 AM
108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருக்கு கொரோனா.. உத்தரவை மீறியதால் வழக்குப்பதிவு

கரூரில் கொரோனா தொற்று பாதித்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் 108 ஆம்புலன்சில் வேலை பார்த்த மருத்துவ உதவியாளர் ஒருவர் கடந்த 24-ம் தேதி கரூர் திரும்பினார். வெளியூரில் இருந்து வந்ததால் அவரது வீட்டை தனிமைப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். அவரையும் 14 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அதையும் மீறி கரூரில் 108 ஆம்புலன்சில் கடந்த 27 ம் தேதி மருத்து உதவியாளராக வேலை பார்த்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தொற்று உறுதியாகி நேற்று முன்தினம் நள்ளிரவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதனால், தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பொது இடங்களுக்கு சென்றது, நோய் தொற்றை பரவும் வகையில் ஈடுபட்டது என்பன உள்ளிட்ட வகையில் கொரோனா தொற்று பாதித்த மருத்துவ உதவியாளர் மற்றும் அவருக்கு 108 ஆம்புலன்சில் பணி வழங்கிய மண்டல மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.