Published : 01,Jun 2017 03:16 PM
இந்திய அணியின் பயிற்சியாளர் ரேஸில் சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விரேந்திர சேவாக் விண்ணப்பித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் முடிவடைவதால், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. விண்ணப்பிப்பதற்காக காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே, விரேந்திர சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத் டோடா கனேஷ், ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை நிர்வகிக்கும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவுக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனாலேயே பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்ப அறிவிப்பினை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டதாகத் தெரிகிறது. பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கை விண்ணப்பிக்க பிசிசிஐ நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சேவாக்கின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கும்ப்ளேவே பயிற்சியாளராகத் தொடரலாமா அல்லது புதிய பயிற்சியாளரை நியமிக்கலாமா என்பதை சச்சின், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ ஆலோசனைக் குழு முடிவு செய்யும்.