Published : 16,May 2017 05:50 AM
கால்நடை மருத்துவம்: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வெட்ரினரி சைன்ஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன. இக்கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் படிக்கும் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 320 இடங்கள் உள்ளன.
இதற்கு ஆன்லைன் விண்ணப்ப முறை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. வரும் 31-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, தேவையான சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051 என்ற முகவரிக்கு ஜூன் 7-ம் தேதி மாலைக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
”இரண்டு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 19, 20, 21-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கும்” என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.