Published : 28,Jun 2019 03:37 PM
சிறுமி பாலியல் வன்கொடுமை - கணவருக்கு உடந்தையாக இருந்த மனைவி

சென்னை அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் ராணுவ வீரரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கும் கொடூர சம்பவம் அனைவரது நெஞ்சையும் பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் மீனாட்சி சுந்தரம் என்ற முன்னாள் ராணுவ வீரரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டில் விடப்பட்ட சிறுமியை காணவில்லை என தாயார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், சிறுமியினர் உறவினரும் அண்டை வீட்டைச் சேர்ந்தவருமான மீனாட்சி சுந்தரத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த காவல்துறையினர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கொலை செய்துவிட்டு கழிவறையில் உள்ள வாலியில் சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளார். மீனாட்சி சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் மீனாட்சி சுந்தரத்தின் மனைவி ராஜம்மாளையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை மறைக்க உதவியதாக ராஜம்மாளை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, குற்றவாளியை தப்பிக்க காவலர்கள் முயற்சி செய்வதாக கூறி சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.