Published : 14,Jan 2019 06:20 AM
கணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்

கணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் பத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உளவுத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு நபரின் கணினியையும் கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் நாட்டின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. கணினிக்கு சொந்தக்காரர் அல்லது கணினிக்கு இணைய சேவை வழங்கும் சேவை வழங்குநர், இந்த 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் எந்த விவரங்களையும் அளிக்க வேண்டும். மீறி அளிக்கத் தவறினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுபோன்ற கணினி கண்காணிப்பு நடவடிக்கையால் தனிநபர் உரிமை பறிக்கப்படுவதாகவும் எனவே இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் 6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.