Published : 23,Oct 2018 07:39 AM
ஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்குகிறார் லிங்குசாமி: ஜெயானந்த் திவாகரன் தகவல்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை லிங்குசாமி இயக்குவார் என்று திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
பிரபலங்களின் வாழ்க்கை கதையை திரைப்படமாக்குவது இப்போதைய டிரென்ட். சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. அவரது வாழ்க்கை கதையை மூன்று பேர் இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
Read Also -> பிரமாண்டத்தில் மிரட்டும் பிரபாஸின் ’சாஹோ’ டீசர்!
முதலில் விஜய் இயக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கிறார். இவர்தான் தென்னிந்திய மொழிகளுக்கு வெளிநாட்டில் விருது வழங்கும் ’சைமா’ விழா வை நடத்தி வருகிறார். மேலும், 83 ஆம், ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து, ’83 world cup’, ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமான ’என்டி ராமராவ்’ சுயசரிதை ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அன்றைய தினமே படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
ஜெயலலிதாவாக நடிக்க த்ரிஷா, நயன்தாரா, ஜோதிகா உட்பட முன்னணி நடிகைகள் சிலர் போட்டி போடுகின்றனர். இந் நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும் அறிவித்துள்ளார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ‘ஜெயலலிதா ஓர் இரும்பு பெண்மணி. அவரது வாழ்க்கை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று முடிவெடுத்து 4 மாதங்களுக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறேன்’ என்றார். இவரது படத்துக்கு ’The Iron Lady’ என்று டைட்டில் வைத்துள்ளார். நித்யாமேனன் ஜெயலலிதாவாகவும் நடிகை வரலட்சுமி, சசிகலாவாகவும் நடிக்கவுள்ளனர்.
Read Also -> “குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை
இந்நிலையில் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை படமாக்குகிறார். இதை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இவர் ஒய்-ஸ்டார் சினி மற்றும் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுபற்றி ஆதித்யா பரத்வாஜ் கூறும்போது, ’இந்தப் படத்தை இயக்குவது உறுதியாகி இருக்கிறது. படத்துக்கு தற்காலிகமாக, புரட்சித் தலைவி’ என்று டைட்டில் வைத்திருக்கிறோம். சிலர் ’அம்மா’ என்பதை இதோடு சேர்க்குமாறு கூறியுள்ளனர். இசையமைக்க இளையராஜாவிடம் பேசியிருக்கிறோம். படத்தின் கதை உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் ரெடியாக இருக்கின்றன. எல்லாம் சரியாக நடந்தால் டிசம்பரில் படத்தை தொடங்க இருக்கிறோம்’ என்றார்.
இதற்கிடையே திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில், ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை லிங்குசாமி இயக்குவார் என்று தெரிவித்துள்ளார்.
Read Also -> வாழ்த்துகளில் நனையும் பாடகி விஜயலட்சுமி!
அதில் அவர், ’அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர், எனது நண்பர் லிங்குசாமியால் படமாக்கப்படும். இதில் நடரா ஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.