Published : 30,Mar 2017 03:26 AM
டெல்லிக்கு புறப்பட தயாராகும் மேலும் 3,000 விவசாயிகள்

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மேலும் 3 ஆயிரம் விவசாயிகள் டெல்லி புறப்பட உள்ளதாக திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கூறினர்.
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17-ஆவது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மற்ற மாநில விவசாயிகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, திருவண்ணாமலை மற்றும் விழுப்புர மாவட்ட விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து டெல்லிக்கு ரயில் மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டு சென்றனர். தங்களது உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மேலாடையின்றி, துண்டை மட்டும் அணிந்து டெல்லி செல்லும் அவர்கள், ஜந்தர்மந்தரில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
அப்போது பேசிய அவர்கள், கோரிக்கை நிறைவேறாவிட்டால் மேலும் 3 ஆயிரம் விவசாயிகள் டெல்லி புறப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.