Published : 30,Jun 2018 04:41 AM
வீடு தேடிச் சென்று எம்எல்ஏக்களை அணி மாற்றுங்கள்: எடியூரப்பா பகிரங்க பேச்சு

அதிருப்தி எம்எல்ஏக்களின் வீட்டிக்கு சென்று அவர்களை பாரதிய ஜனதாவுக்கு அழைத்து வருமாறு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, கர்நாடக பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்கவே மக்கள் வாக்களித்ததாகவும், அது நிறைவேறும் என்று அவர்கள் நம்புவதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் பிரதமர் மோடியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களின் வீட்டுக்குச் சென்று அவர்களை பாரதிய ஜனதாவில் சேர்க்க வேண்டும் என்றும் எடியூரப்பா கூறினார். எனினும், பொருந்தாத கூட்டணி அரசு, தானாக கவிழும் என்பதால் பாரதிய ஜனதா அவசரம் காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடகா தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமைந்ததை அடுத்து, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எனத் தெரிய வந்ததால் பதவி விலகினார். இதனையடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமியும், துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வராவும் பதவியேற்றுள்ளனர்.