Published : 09,Jan 2018 04:41 PM
குழந்தை விஸ்வா எங்கே?: புதிய சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை தீவிரம்

சென்னையில் கடந்த மாதம் கடத்தப்பட்ட ஆண் குழந்தையின், கடத்திச்செல்லும் புதிய சிசிடிவி காட்சி கிடைத்துள்ளதையடுத்து குழந்தையை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த விஸ்வா என்ற குழந்தை டிசம்பர் 25-ஆம் தேதி காணாமல் போனது. அது குறித்து குழந்தையின் தந்தை குருசாமி கொடுத்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் காவல்துறையினர் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் புகைப்படத்தை பொது இடங்களில் ஒட்டியும், பொதுமக்களிடம் காண்பித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீட்டில் இருந்து ஒருகிலோமீட்டர் தொலைவில், ஒரு நபர் குழந்தை விஸ்வாவுடன் செல்லும் காட்சிகள் ஏற்கனவே கிடைத்த நிலையில், தற்போது தரமணி பேருந்து நிலையத்தில் குழந்தை விஸ்வாவுடன் ஒருவர் வேளச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்தில் ஏறும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்துள்ளன. பேருந்துநிலையம் அருகேயுள்ள கடை ஒன்றிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.