Published : 19,Nov 2017 10:45 AM
பத்மாவதி திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைப்பு: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி

சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அறிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ இந்தி திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதல் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டுமென வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அவர் கூறினார்.