
மேட்டூரில் புதைக்கப்பட்ட பிணம் வெளியே வந்து மழை நீரில் மிதந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 2௦ வது வார்டு நேருநகரில் மயானத்தில் புதைக்கப்பட்ட பிணம் மழையால் வெளியே வந்து மிதந்துள்ளது. கடந்த சில வாரங்களாக மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலகாக மழை பெய்ததின் காராணமாக நேருநகர் மயானத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்களது இறந்துபோன உறவினர்களை அடக்கம் செய்வதில் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து பலமுறை மேட்டூர் நகராட்சிக்கு தகவல் கொடுத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் ஆதரவற்ற பிணத்தை பிரேத பரிசோதனை செய்து நகராட்சி நிர்வாகத்திடம் அடக்கம் செய்யச் சொல்லி ஒப்படைத்துள்ளனர். ஆனால் நகராட்சி ஊழியர்கள் முறையாக அடக்கம் செய்யாமல் கண்துடைப்பிற்காக மண்ணை போட்டு மூட்டி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மயானத்தில் புதைக்கப்பட்ட பிணம் மழை நீரில் மிதந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற அலட்சிய போக்கில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.