Published : 07,Feb 2023 11:27 AM
'இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்பில்லை' - அஷ்வின்

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க வாய்ப்பில்லை என்கிறார் அஷ்வின்.
6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு இடையே நல்லுறவு இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து போட்டி நடக்கும் இடம் குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.இந்நிலையில் இந்த விவகாரம் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், “சின்ன வயசுல எங்க வீட்டுக்கு நீ வரமாட்ட, அதுனால நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லுவோம். அதேமாறி இங்க என்ன நடக்குதுன்னா, பாகிஸ்தான் நாங்களும் வேர்ல்டு கப்புக்கு வரமாட்டோம்ன்னு சொல்லிருக்காங்க. ஆனால், அது நடக்காதுன்னு நான் நினைக்கிறேன். கடைசியா எங்க நடக்கும்னு பாத்தீங்கன்னா… துபாய் இல்லைன்னா ஸ்ரீலங்காவுல தான் நடக்கும். ஸ்ரீலங்காவுல நடந்தால் நான் பார்க்க சந்தோஷப்படுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.