Published : 01,Jan 2023 08:39 AM
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்தனர்.
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள விடுதிகளில்; கலை நிகழ்ச்சிகளுடன் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஆடிப்பாடி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் இன்று அதிகாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களும் குவிந்தனர். இதையடுத்து முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து பின்னர் கடலில் புனித நீராடி புத்தாண்டை கொண்டாடி புத்துணர்வடைந்தனர்.