Published : 18,Dec 2021 08:01 AM
கடன் வட்டியை 0.1% உயர்த்தியது எஸ்பிஐ - வீடு, வாகனக் கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு

கடன்களுக்கான அடிப்படை வட்டியை நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் அடிப்படைக் கடன் வட்டி விகிதம் 7.55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன் வட்டியும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கும் வட்டி அதிகரிக்கும் என்பதால் தவணை அதிகரிக்கவோ அல்லது திரும்பச் செலுத்தும் காலக்கெடு அதிகரிக்கவோ நேரிடும்.

எஸ்.பி.ஐ.யின் நடவடிக்கையைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் கடன் வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளுக்கான கடன் வட்டியான ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என கடந்த 8ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையிலும் கடன் வட்டியை எஸ்பிஐ 0.1 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.