Published : 16,Aug 2020 10:12 PM
கோவையில் கொரோனா காலத்திலும் குறையாத தாய்ப்பால் கொடையாளர்கள் !

கோவை அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு 4 மாதங்களில் 165.80 லிட்டர் தாய்ப்பால் தானம்; 2,534 பச்சிளங் குழந்தைகள் பயன் கொரோனா காலத்திலும் குறையாத கொடையாளர்கள்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு கொரோனா காலத்திலும் குறையாமல் 4 மாதங்களில் 165.80 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கப்பட்டதன் மூலம் 2,534 பச்சிளங் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவk் கல்லூரி மருத்துவமனையில் 2015-ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது, இங்கு 1.5 கிலோவுக்குக் கீழ் உள்ள பச்சிளங் குழந்தைகள், நோய்வாய்ப்பட்டு தீவிர சிகிச்சை பெறும் தாய்மார்களின் குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி மிகுந்த பயனளித்து வருகிறது.
இங்குள்ள பச்சிளங் குழந்தைகள் பிரிவில் தினமும் 100 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகின்றனர். திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும்கூட குழந்தைகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் மட்டும் 1021 பேர், 165.80 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளனர். இதன்மூலம் 2,534 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.
கொரோனா தொற்று தீவிரமான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் 1,747 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில், 218 குழந்தைகள் ஒரு கிலோ எடைக்குக் குறைவாகவும், 282 குழந்தைகள் 1.5 கிலோவுக்கு குறைவாகவும் இருந்த குழந்தைகளையும் காப்பாற்றியதில் தாய்ப்பால் வங்கியும் முக்கிய காரணம் எனக்கூறும் மருத்துவர்கள், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு ஒரு நாளைக்கு 10-20 மில்லி லிட்டர் பால் மட்டுமே தேவைப்படும் என்பதால் ஒருவர் 100 மி.லி. தானமாக அளித்தால் அதை 5-10 குழந்தைகளுக்கு அளிக்க முடியும் என்கின்றனர். தாய்மார்களிடமிருந்து பெறப்படும் பாலில் நுண்கிருமிகள் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திய பிறகே, குளிச்சாதன வசதி உதவியுடன் பால் சேமிக்கப்படுகிறது.
எனவே, தாய்ப்பாலை தானமாக கொடுக்க வேண்டுமெனில் எச்ஐவி, மஞ்சள் காமாலை (ஹெபடைடிஸ் பி), பால்வினை நோய் தொற்று இல்லையென கர்ப்ப காலத்தில் பெற்ற பரிசோதனை சான்று இருக்க வேண்டும் என்றும், தானம் அளிக்க விரும்புவோர் வாரத்தின் அனைத்து நாட்களிலும் தாய்ப்பால் வங்கியில் தானம் அளிக்கலாம்" என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.