Published : 14,May 2019 08:55 AM
ஐ.எஸ். அமைப்பிடம் பணம்வாங்கி விட்டாரா கமல்?: ராஜேந்திர பாலாஜி

ஐ.எஸ். அமைப்பிடம் கமல்ஹாசன் பணம்வாங்கி விட்டாரா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் “ முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்குப் பின்னணி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ண கொடியின் மூன்று நிறங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன். அதனை மார்தட்டிச் சொல்வேன்” என்று குறிப்பிட்டார்.
கமலின் இந்தக்ச் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதனிடையே, சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். இதனையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் ஐ.எஸ்.அமைப்பிடம் கமல்ஹாசன் பணம்வாங்கி விட்டாரா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பின் என் கருத்தை திரும்பப் பெறுகிறேன். ஐ.எஸ்.அமைப்பிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிவிட்டாரா..? கமல்ஹாசனின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். தீவிரவாதத்தை தூண்டி விடும் வகையில் கமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு. என்ன வேண்டுமானாலும் சொல்வற்கு கமல்ஹாசன் என்ன ஜனாதிபதியா அல்லது கவர்னரா..? அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; கமலுக்கு அந்த அருகதை கிடையாது ” என தெரிவித்தார்.