Published : 05,Oct 2018 02:06 AM
முரளி விஜய் புகார்: தேர்வு குழு தலைவர் ஆச்சரியம்!

'அணியில் இருந்து நீக்கப்படுவது தொடர்பாக, யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று முரளி விஜய் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது' என்று இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அறிமுக வீரர் பிருத்வி ஷா அதிரடி சதம் அடித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராத் கோலியும் (72 ரன்) விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்டும் (17 ரன்) களத்தில் உள்ளனர்.
இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்த அவர், 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்தும் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் தேர்வுக் குழுவினர் மீது குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல முரளி விஜய்யும் தேர்வு குழு மீது புகார் கூறியிருந்தார்.
‘இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ பேசவில்லை. இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்து இருந்த அணி நிர்வாகிகளிடம் பேசினேன். ’அணி வீரர்கள் தேர்வுக்கு எந்த மாதிரியான அளவுகோல் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது புரியாததாக இருக்கிறது’ என்று ஹர்பஜன்சிங் கூறிய கருத்தை ஒப்புக்கொள்கிறேன். அணியில் இருந்து ஒரு வீரரை நீக்கும் போது அதற்கான காரணத்தை அந்த வீரரிடம் சொல்வது முக்கியம். அப்போதுதான் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதை அறிந்து அதற்கு தகுந்தபடி ஆட்டத்தை மேம்படுத்த முடியும்’ என்று கூறியிருந்தார்.
இதுபற்றி அறிந்த தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், முரளிவிஜய்யின் பேச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ’அணியில் இருந்து நீக்கப்படுவது தொடர்பாக, யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று முரளி விஜய் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. தேர்வு குழுவைச் சேர்ந்த தேவங் காந்தி ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதை அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தார். பிறகு எப்படி இதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்..
இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட பின் முரளி விஜய், கவுன்டி கிரிக்கெட்டில் எப்படி பங்கேற்றார்? நாங்கள் பேசாமலா இது நடந்தது? இந்திய கிரிக்கெட் வாரியம்தான் அதை செய்து கொடுத்தது. விஜய் ஆட்டத்தில் கவனம் செலுத்தவேண்டும். தேவையில்லாததை பேச வேண்டாம்’ என்று தெரிவித்தார்.