Published : 08,Nov 2021 08:53 PM
மழை வெள்ளத்தில் சிக்கிய மூத்த தம்பதியினர்: நாற்காலியில் வைத்து மீட்ட பேரிடர் குழுவினர்

சென்னையில் வயது முதிர்ச்சியால் நடக்க முடியாத தம்பதியை நாற்காலியில் வைத்து தூக்கி சென்று மாம்பலம் காவல் துறையினர் மீட்டனர்.
சென்னை தி.நகர் ராமன் தெருவில் வசித்து வருபவர்கள் மூர்த்தி (81) ஷியாமளா (70) ஆகியோர் வசிக்கும் வீட்டை மழைநீர் சூழ்ந்து கொண்டதால் வெளியே வரமுடியாமல் தவித்து வந்தனர். இதனால் உறவினர் வீட்டிற்கு தங்களை அழைத்துச் சென்று விடும்படி காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரகாபரன் தலைமையிலான சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு காவல் குழுவினர் அவர்களது வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர், முதியவர் மூர்த்தி மற்றும் அவரது மனைவி ஷியாமளா ஆகிய இருவரையும் நாற்காலியில் அமர வைத்து மழைநீர் பாதித்த பகுதியிலிருந்து மீட்ட போலீசார், காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக சேர்த்தனர்.