Published : 22,Jul 2017 05:28 AM
வாட்ஸ்அப் மூலமும் புகார் தெரிவிக்கலாம்: அமைச்சர் சிவி.சண்முகம்

தமிழக அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஏதும் நீக்கப்படவில்லை. மக்கள் தங்களது புகாரை மின்னஞ்சல் மூலம்தான் அனுப்ப வேண்டும் என்பதில்லை, வாட்ஸ்அப் மூலமும் தெரிவிக்கலாம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அனைத்துத்துறைகளிலும் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டிய நடிகர் கமல்ஹாசனிடம் ஆதாரம் இருக்கிறதா என அமைச்சர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் ஊழல் குறித்து மக்களே ஆதாரங்களை அனுப்புவார்கள் எனக்கூறி அமைச்சர்களின் இமெயில் முகவரிகளை டிவிட்டரில் வெளியிட்டார். இதையடுத்து இணையதள பக்கத்தில் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பேசிய அமைச்சர் சிவி.சண்முகம், அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டுமென தாங்கள் விரும்புகிறோம். அதேசமயம் இரட்டை இலையை மீட்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழக அமைச்சர்களின் இணையதள பக்கத்தில் இருந்து மின்னஞ்சல் முகவரிகள் ஏதும் நீக்கப்படவில்லை எனக்குறிப்பிட்ட அவர், மக்கள் தங்களது புகாரை மின்னஞ்சல் மூலம்தான் அனுப்ப வேண்டும் என்பதில்லை, வாட்ஸ்அப் மூலமும் தெரிவிக்கலாம் எனக் கூறினார்.