Published : 15,Nov 2019 08:16 AM

பிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் சேர முடியாத விவசாயிகளுக்கு புதிய சலுகை

New-concession-for-farmers-who-cannot-enroll-in-PM-s-subsidy-scheme

பிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் சேர முடியாத விவசாயிகளுக்கு புதிய சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனால், இதுவரை இணையாத விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமரின் பெயரில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், தமிழகத்தில், 35 லட்சம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக, தமிழக விவசாயிகளுக்கு 1,760 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் விடுபட்டுபோன விவசாயிகளை சேர்ப்பதற்காக 10 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் வாயிலாக புதிதாக 47 ஆயிரத்து 272 விவசாயிகளை வேளாண் துறையினர் சேர்த்துள்ளனர். மேலும், பல விவசாயிகளை சேர்ப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி கிடைத்துள்ளது. 

இதுகுறித்து ஓமலூர் வட்டார வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும்போது “பல விவசாயிகள், தங்கள் பெயரில் நிலம் உள்ள கிராமத்தில் வசிக்காமல், வேறு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இதனால், அவர்களால் இத்திட்டத்தில் சேர முடியவில்லை. இதை, மத்திய அரசிடம் எடுத்துக்கூறி, சிறப்பு அனுமதியை, வேளாண்மைத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி மற்றும் இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பெற்றுள்ளனர். இனி, விவசாயிகள் எங்கு வசித்தாலும் இந்த திட்டத்தில் சேர முடியும். திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், உதவி வேளாண் அலுவலர்கள் அல்லது அரசின், இ-சேவை மையத்தை அணுகி பயனடையலாம்” என்று கூறினர். அதனால், சிறு குறு விவசாயிகள் அந்தந்த வேளாண்மைத்துறை அலுவலத்திற்கு சென்று உதவி வேளாண் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்