Published : 13,Sep 2019 03:07 PM
மதுரையில் கனமழை : சாலையோரம் தேங்கிய நீரால் போக்குவரத்தில் சிரமம்

மதுரை மாநகரின் பல பகுதிகளில் 4 மணி நேரங்களுக்கு மேலாக பரவலான மழை பெய்தது.
மதுரை மாநகர் பகுதிகளான கே.கே.நகர், தல்லாகுளம், அண்ணாநகர், பழங்காநத்தம், டி.வி.எஸ் நகர், வசந்தநகர், பெரியார் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மாலை துவங்கிய கனமழை தொடர்ந்து 4 மணி நேரமாக பெய்தது. பிற்பகல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகியிருந்தனர்.
ஆனால் மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. மழையின் காரணமாக மாநகரின் பல பகுதிகளில் 3 மணி நேரங்களுக்கு மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த மழையால் சாலையோரம் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.