Published : 08,Mar 2023 12:11 PM
திருச்சி: நடுரோட்டில் அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை

திருவெறும்பூர் அருகே அதிமுக நிர்வாகியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கோபி (32). அதிமுக நிர்வாகியான இவர், நேற்றிரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் டிபன் ஆர்டர் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து உணவை வாங்க சென்றபோது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கோபியை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இந்நிலையில், அவர்களிடம் இருந்து கோபி தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மறித்த அந்த கும்பல், ரோட்டில் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துவாக்குடி போலீசார், உயிரிழந்த கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.