Published : 04,Sep 2021 03:52 PM
சத்தியமங்கலம்: மாணவருக்கு கொரோனா - அரசுப்பள்ளிக்கு விடுமுறை

சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இவரது மகன் புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். இதையடுத்து இன்று அந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாணவன் படிக்கும் வகுப்பறையில் உள்ள 27 மாணவர்கள் மற்றும் 42 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.