Published : 22,Apr 2021 01:40 PM

இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்- சென்னைவாசிகளுக்கு வானிலை மையம் அறிவுறுத்தல்

Chennai-Meteorological-Department-has-warned-of-heavy-and-unnatural-sweating-in-Chennai-and-coastal-districts

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று (ஏப்ரல் 22) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அடுத்த 3 நாட்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை மற்றும் வெளிர் வண்ணக் கதர் ஆடைகளை அணிவது சிறந்தது.

image

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், காற்றில் இயல்பான வெப்பநிலை ஆனது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை மற்றும் வெளிர் வண்ணக் கதர் ஆடைகளை அணிவது சிறந்தது'' எனத் தெரிவித்துள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்