Published : 04,Jun 2020 04:28 PM
வரதட்சணை கொடுமையால் மாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மருமகள் கைது

வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக மாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே மணியம் பள்ளத்தைச் சேர்ந்த ரமேஷ். இவர் பிரதீபாவைக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 9 மாத குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே பிரதீபாவிற்கும் அவரது மாமியார் ராஜம்பாளுக்கும் அடிக்கடி சண்டை நடைபெற்ற வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனையடுத்து நேற்று மதியம் 100 நாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டில் வந்து உறங்கிக்கொண்டிருந்தார் ராஜம்பாள். அவர் மீது ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய்யை ஊற்றி அவரது மருமகள் பிரதீபா, தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் 90 சதவீதம் தீக்காயமடைந்த ராஜம்பாள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜாம்பாள் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்குத் தீவைத்த மருமகள் பிரதீபாவை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் வரதட்சணைக் கேட்டு மாமியார் ராஜாம்பாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் மேலும் தனது கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தனக்கு இடையூறு செய்ததாகவும் அதனால் தனது மாமியாரைக் கொலை செய்யத் திட்டமிட்டு அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் பிரதீபா கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மாமியாரை மருமகள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.